Friday, November 16, 2012

துப்பாக்கி - மாற்றியமைக்கப்படும் மாஸ் ஃபார்முலா



படம் சூப்பர் ஹிட் என்று இந்நேரம் தெரிந்திருக்கும். இவ்வருடத்தின் மிகப்பெரிய வசூல்வாரியாகவும் இருக்கக்கூடும். இத்தருணத்தில் இப்படத்தின் விமர்சனத்தை மட்டுமே எழுதத் தோன்றவில்லை. இதன் மூலம் கொஞ்சம் மசாலா சினிமாவையும் அலசலாம் என்று நினைக்கிறேன். 





90 களில் வந்த ரஜினி படங்களில் சில பொதுவான அம்சங்கள் இருக்கும். ரஜினிக்கே ஏற்ற மாஸ் அயிட்டங்கள் இருக்கும். ரசிகர்களைக் கதறச் செய்யும் சில சீன்கள் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் திரைக்கதையோடு பிணைக்கப்பட்டிருக்கும். துண்டாக தெரியாமல் மிகக் கவனமாக கதையோடு முடிந்தவரையில் ஒட்டவைக்கப்பட்டு, ஒரு கோர்வையாக, ஆனால் ரஜினிக்கேற்ற சில தீனிகளும் தூவப்பட்டு வந்திருக்கும். அந்தப் படங்கள் அனைத்தும் அந்தந்த வருடங்களின் ப்ளாக்பஸ்டர்களாக மாறியது. உதாரணம், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை. ரஜினிக்கு அடுத்த தலைமுறையில் உருவான மாஸ் ஹீரோக்கள் விஜய்யும் அஜீத்தும். ஏதோ ஒரு காரணத்துக்காக முதல் காட்சிக்கு சும்மா கைதட்டிக்கொண்டே, விசிலடிக்க வேண்டும் என்று பாக்ஸ் ஆபிஸ் முன்னால் விடிகாலையில் க்யூ கட்டும் ரசிகனுக்கு இவர்கள் இருவரும் கிடைத்தார்கள். அந்த கைத்தட்டல்களையும், விசில்களையும் வாங்கிக் கொண்டார்கள். ஆனால் ரஜினி படங்கள் விசிலடிக்கப்பட்டதற்கான காரணங்களை இந்த இருவரின் படங்களும் ரசிகனுக்கு தந்ததா என்றால் நிச்சயம் இல்லை. ஆனாலும் ரசிகன் விசுவாசமாக கைத்தட்டிக் கொண்டு தான் இருந்தான். 








ஆனால் இவர்கள் தலைமுறையில் ஒரு ஆபத்தான ஃபார்முலா உருவாகியது. அது, விஜய்யும் அஜீத்தும் திரையில் வந்தாலே போதும், படம் ஓடி விடும் என்று இவர்களே ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இவர்களை ஒரு மாஸ் ஹீரோவாக ஆக்கவும் ஒரு நல்ல திரைக்கதை (கில்லி, போக்கிரி, தீனா, பில்லா) தேவைப்பட்டது என்பதை இவர்கள் போகப் போக மறந்து போனார்கள். தங்களை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டு பலபல குப்பைகளை ரசிகனின் தலையில் கொட்டிக் கொண்டே வந்தனர். அவனும் எல்லாவற்றையும் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவனாக தாங்கிக் கொண்டு கைதட்டிக் கொண்டே வந்தான். இவர்கள் வழியில், வித்தியாசமாய் நடித்து தனியிடம் பிடித்து வந்த விக்ரமும் சூர்யாவும் பின் கார்த்தியும் கூட மாஸ் நாயகர்கள் ஆகும் ஆசையில் சில சுவாரசியமான படங்களுக்கு பிறகு (தில், தூள், சிங்கம், அயன்) நாயகனை முன்னிறுத்தும் குப்பைகளை அள்ளித் தெளித்தனர் (கந்தசாமி, ராஜபாட்டை, ஆதவன், மாற்றான், சகுனி). பாவம் ரசிகன் எத்தனை நாள் தான் விசுவாசமாய் கைதட்டிக் கொண்டே இருப்பான். சோர்ந்தான். இருப்பினும் கைதட்டுவதை விடவில்லை. ஆனால் சற்று மந்தமாகத் தட்டினான். அவ்வளவுதான். இந்த சினிமாக்களின் அடிநாதமான வசூலை அதுவே ஆட்டிப்பார்த்தது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் மசாலாப் படங்கள் தலைகுப்புறப் படுத்துப் போனது. இதை வைத்தாவது இவர்கள் திருந்தியிருக்கலாம். ஆனால் இவர்கள் மாற்றியது, படத்தின் லொக்கேஷன்களையும், தொழில்நுட்பங்களையும் பட்ஜெட்டையும் தானே தவிர, கதையையோ திரைக்கதையையோ அல்ல. இது போன்று தொட்டுத் தொடர்ந்து வந்த இந்த பாரம்பரியத்தைத் தான் உடைத்திருக்கிறது துப்பாக்கி. 



ஆம், என்னளவில் விஜய்க்கும் அஜீத்திற்கும் இருக்கும் ரசிகர் பலம் அளப்பரியது. அதற்கேற்ற ஒரு படத்தைக் கூட இவர்கள் கொடுக்கவில்லை என்பேன். ஒவ்வோர் சுமாரான படங்களுக்கும் ரசிகன் தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டு இதுதான் எங்க தலைவர் மாஸ் என்று இதுவரை மார்தட்டி வந்தான். ஆனால் முதல் முறை, விஜய் தன் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் தீனி போட்டிருக்கிறார் என்று கூறலாம். நிறைய காட்சிகளில் விஜய்க்காக மட்டும் அல்லாமல் காட்சிகளுக்காக ரசிகர்கள் தியேட்டரில் கூப்பாடு போடுகிறார்கள். இதுதான் ரசிகர்கள் எதிர்பார்த்தது. இனியும் நாயகர்களை மட்டும் வைத்து படங்களை எடுத்துவிட முடியாது என்பது உணரப்பட்டிருக்கிறது. திரைக்கதைக்கும், காட்சி அமைப்பிற்கும் நல்ல முக்கியத்துவம் கொடுத்து, அதில் நாசூக்காக ஹீரோயிச வேலைப்பாடுகள் செய்து, ரசிகர்களுக்கு பரிமாறப்பட்டிருக்கிறது. அவர்கள் வயிறார உண்கிறார்கள். அதற்கென இந்தப் படத்தில் குறைகளே இல்லையா எனலாம். நிறைய இருக்கின்றது. படு வழக்கமான க்ளைமேக்ஸ், முஸ்லிம்களை தீவிராதிகளாகவே காட்டும் சிறுபிள்ளைத்தனம், தேவையே அற்ற பாடல்கள் என பலப்பல. இனியும் ரசிகர்களுக்காகத் தான் பாடல் வைத்தேன் என்று இயக்குநர்கள் பூ சுற்ற முடியாது. தேவையற்ற பாடல்களின் போது, முதல் நாள் முதல் காட்சிகளிலேயே சிகரெட்டுகள் பற்ற வைக்கப்படுகின்றன. 



ஆனாலும் இப்படம் இக்குறைகளை மறக்கடிக்கக் காரணம் நிச்சயம் ஹீரோயிசம் தாண்டிய திரைக்கதை அம்சங்கள் தான். மாஸ் படங்களுக்கு யாரும் இங்கே எதிரிகள் கிடையாது. அலசிப் பார்த்தால் ஜேம்ஸ்பாண்ட் படங்களே மாஸ் படங்கள் தான். ஆனால் அது இங்கே தனி மனிதத் துதியாகவும், ஹீரோ வந்தா, நின்னா, நடந்தா போதும் என்றும் அர்த்தப்பட்டு வந்தது. அந்நிலைமையைத் தான் துப்பாக்கி சுட்டிருக்கிறது எனக் கருதுகிறேன். சரியான திரைக்கதையில் சரியான மாஸ் ஃபார்முலா என்று பலப்பல வருடங்களுக்கு பிறகு முழுக்க வேறு வகை ஸ்டைலில் 90 களின் ரஜினி வகைப் படமாக வந்துள்ளது. இனி மாஸ் படங்களும் கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டால் தான் வெற்றி பெற முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறது. வெகு வெகு நாட்களுக்குப் பிறகு, ஏன் வருடங்களுக்குப் பிறகு ஒரு ப்யூர் மாஸ் கமெர்ஷியல் படம், நாயகனுக்காக மட்டும் அல்லாமல், வேறு பல திரை நுணுக்கங்களுக்காகவும் மெகா வெற்றியை ருசிக்கப் போகிறது. சுருக்கமாக சொல்லப் போனால், துப்பாக்கி வைத்த குறியை ஆல்மோஸ்ட் சுட்டே விட்டது. நான், துப்பாக்கி படம் தமிழ் சினிமா உலகின் ஃபார்முலாவையே புரட்டிப் போட்டு விட்டது என்று கூசாமல் சொல்லவில்லை. ஆனால் ஒரு நல்ல மாற்றத்திற்கான துவக்கப்புள்ளியை இப்படம் இட்டிருக்கிறது என்று தைரியமாகக் கூறுகிறேன். 



என்னடா ஒரு மசாலா படத்திற்கு போய் இவ்வளவு பெரிய விமர்சனமா என்ற ஒரு கேள்வி எழலாம். நன்றாக கவனித்தால் நான் இப்படத்தை பற்றி இங்கே எழுதியிருப்பது மிகக் குறைவு. ஒட்டுமொத்த மசாலா படங்களின் நிலையையும், அதன் இலக்கணங்கள் மாற்றியமைக்கப்படுவதையும் தான் எழுதியிருக்கிறேன் என்பது, ஆழ்ந்து படிப்பவர்களுக்குப் புரியும் என நம்புகிறேன்.

Tuesday, November 6, 2012

ராயல் சல்யூட் !!!


மதுரையில் ஏற்பட்ட ஓர் அனுபவம். கொளுத்தும் வெயில். நானும் இரு நண்பர்களும், மதிய உணவு முடித்துவிட்டு, ஒரு கடையில் டீ, குளிர்பானம் (பொவண்டோ !) குடித்துக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு வயதான பெரியவர், எண்பது வயதைத் தாண்டியிருப்பார், தள்ளாடியபடி அருகில் வந்தார். கைகளில் பர்ஸ்களும், செயற்கை மாலைகளும் வைத்திருந்தார். அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் சென்று வேண்டுமா என்று கேட்டு விற்றுக்கொண்டிருந்தார். இறுதியில் எங்கள் அருகேயும் வந்து ‘வேணுமா’ என்று கேட்டார். அந்த பொருட்கள் எங்களுக்கு தேவையில்லாததால், வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டோம். உச்சி வெயிலில் அவர் தள்ளாடியபடி சென்றதைப் பார்த்து, பரிதாபப்பட்ட நண்பர், அவரை அழைத்து, ‘ஏதாவது சாப்படறீங்களா, டீ சொல்லட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில், ‘அதெல்லாம் வேண்டாம். இதுல ஏதாவது வாங்கிக்கோங்க. நானே வாங்கி சாப்பிட்டுக்கறேன்’ . 




ஒரு கணம், ஆடிப்போன நண்பர், செயற்கை மாலைகளை வாங்கி அதற்கான பணத்தைக் கொடுத்தார். அவரும், பணத்தை வாங்கிவிட்டு, தள்ளாடியபடி அடுத்தவரிடம் அந்த பணத்தை விற்பதற்கு தள்ளாடியபடி சென்றார்.

ஒரு நொடியில், பளாரென்று அடித்த பதில் அவருடையது. எங்களின் பரிதாபத்தை ஒரே வார்த்தையில் துடைத்துச் சென்றார். ‘நீங்க என்னடா என்ன பார்த்து பரிதாபப்படுறது. எனக்கு ஓசில லாம் ஒன்னும் வேணாம். ஏதாவது பொருள் வாங்கிக்க. நானே உழைச்சு சம்பாதிச்சு சாப்டுக்கறேன்’ என்றது அவரது பதில். என்ன ஒரு சுயமரியாதை, உழைக்கும் வெறி. அவரது வயதில் இந்த அளவிற்கு ஒரு தன்னம்பிக்கையும் உழைப்பும் எனக்கு வருமா என்று தெரியவில்லை. வரவேண்டும் என்று என்னையே நான் பிரார்த்தித்துக்கொள்கிறேன். நாம் இந்நேரம் எங்காவது அமர்ந்து கொண்டு இந்த பதிவை டைப் செய்து கொண்டு, படித்துக்கொண்டு இருக்கும் இந்நேரத்திலும், நிச்சயம் அந்த உழைப்பாளி மதுரைத் தெருக்களில் ஏதேனும் பொருள்களை விற்று உழைத்துக்கொண்டுதான் இருப்பார். இவரைப் பார்த்தாவது, உக்காந்தே ஓ.பி அடிக்கற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திருந்தணும். இந்த உழைப்பாளிக்கு லைக் போடும் உங்கள் அனைவர் சார்பிலும் ஒரு ராயல் சல்யூட் அடித்துக் கொள்கிறேன் !!!

Sunday, April 1, 2012

சண்டே ஸ்பெஷல்

ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக விடிகிறது.

தினம் நைட்ஷிஃப்ட் பார்க்கும் நண்பன், ‘அப்பாடா கிட்டத்தட்ட ரெண்டு நாள் ரெஸ்ட்தான்டா’ என்று படுக்கையை விரிக்கிறான். அதிகாலை முதல் பின்னிரவு வரை ஓயாமல் உழைக்கும் மக்கள் அருகில் ஒரு குவார்ட்டருடன் இன்னும் எழுந்திரிக்க மனம் வராமல் ப்ளாட்பாரங்களில் படுத்திருக்கிறார்கள். கடற்கரைகளில் ஒரு ஓரங்களில் கார்கள் பார்க் செய்யப்பட்டிருக்க மறு ஓரத்தில் தொப்பைகளை குறைக்க ஒரு கும்பல் ஓடியாடியபடி இருக்கிறது. அவ்வளவு காலையிலும் பழங்கள், பழரசங்கள் என வியாபாரம் சூடு பிடித்தபடி இருக்கிறது. ஒரு பெரும் ஜனநெரிசலுக்கு ரங்கநாதன் தெருக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. மீனவர்களின் படகுகள் கடல்பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஒரு வார மந்தமான வருமானத்தை ஒரே நாளில் எடுத்துவிட தயாராகிக் கொண்டு இருக்கிறார் முடிவெட்டும் அண்ணன். அப்பாக்களை முழுமையாக கவனிப்பதற்கே அம்மாக்களின் ஞாயிறுகள் செல்கின்றன. கிரிக்கெட் மைதானங்களிலும் திரையரங்குகளிலும் அண்ணன்களின் ஞாயிறுகள் கழிகின்றன.

குழந்தைகளின் ஞாயிறுகள் இன்னும் சிறப்பானவை. ஒரு வாரம் அடைந்து கிடந்த ஒரு அறையை விட்டு வெளியே வந்த ஒரு பறவையின் சிலிர்ப்போடே அவர்களின் ஞாயிறுகள் கழிகின்றன. பள்ளிகளின் ரீங்காரம் , மணிகள், மதிய லஞ்ச் டைம் வாசம் , சின்ன சின்ன விளையாட்டுகளை ஞாயிறுகள் அவர்களுக்கு மறுத்தாலும், பாண்டி, வீடியோ கேம், கோலி, படங்கள், அம்மாவின் திட்டு, அக்காக்களின் சண்டைகள், ஊர் சுற்றுவதாய் நினைத்துக் கொண்டு, இரண்டு மூன்று தெருக்கள் அலைவது என வேறு சில சின்ன சின்ன பரவசங்களை ஞாயிறுகள் அவர்களுக்கு தந்தபடியே இருக்கின்றது.

சில ஞாயிறுகள் வித்தியாசமாய் விடிவதுண்டு. மரணத்தின் மடியில் விடிந்த ஞாயிறுகளும் இருக்கின்றன. நண்பனின் மரணம் ஒன்று நிகழ்ந்த ஞாயிறின் வெப்பம் இன்றும் தகித்துக்கொண்டே இருக்கின்றது. சில ஞாயிறுகள் ப்ளாட்பாரங்களில் விடிந்திருக்கின்றது. சனிக்கிழமை இரவு நைட் ஷோ முடிந்து நண்பனின் வீட்டு ஓனர் கெடுபிடியால், ‘இருக்குறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு தமிழ்நாடு’, என்று டயலாக் விட்டுக்கொண்டு திருவான்மியூர் ப்ளாட்பாரங்களில் படுத்த ஞாபகம் அலாதியானது. அங்கு வழக்கமாக படுப்பவர்களின் பார்வைகள் ஆயிரம் அர்த்தங்களுடன் எங்களை மேய்ந்தது. நம் இடத்தை பறித்து விட்டார்கள் என்ற கோபமா, இல்லை, ‘இன்னிக்கு மட்டுந்தான் இருப்பானுங்களா இல்ல டெய்லி வந்து டேரா போட்ருவாங்களா’ என்ற சந்தேகமா என்று தெரியவில்லை. ஆனால் அது அருமையாயிருந்தது.

சனிக்கிழமை ராத்திரி முதல் ஞாயிறு வரை டாஸ்மாக்குகளுக்கு ஓவர்டைம். நேற்று சரக்கடிக்க அழைத்த நண்பன், ‘சீக்கிரம் வாடா, சைட் டிஷ் காலியாயிடும்’ என்றபோது தான் வாரஇறுதிகளின் மகத்துவத்தை உணர முடிந்தது. ஒரு வாரம் போனில் பேசியபடியே இருந்தாலும், பார்த்து கட்டியணைத்து, வெட்டிப்பேச்சு பேசி, நட்பு வளர்ப்பதும் ஞாயிறுதான்.

வாரநாட்களில் மூச்சு விட இடமளிக்காத ரயில்பெட்டிகளும் பேருந்துகளும் நின்று நிதானமாக காற்று வாங்கிக் கொண்டிருக்கும். டி.விக்களின் டி.ஆர்.பிக்கள் அதிகரிக்கும் நாள் ஞாயிறு. அதே போல் தியேட்டர்களும். ஞாயிறு ரசிகர்கள்தான் இன்னும் பற்பல தியேட்டர்களை மூடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். நமக்கு ஞாயிறு என்றால் ஒருவித கொண்டாட்டம், குதூகலம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.


கோயில்களில், சொந்தங்களின் இல்லங்களில், கட்சி, இலக்கிய கூட்டங்களில், பேஸ்புக்கில், கான்ஃபரன்ஸ் அறைகளில், டியூஷன் சென்டர்களில், பின் வீட்டு முற்றங்களில், எடிட்டிங் அறைகளில், கையில் பேனாவுடன் நியூஸ் ஸ்பாட்களில், வண்டிக்கு பைனான்ஸ செய்யும் சேட்டின் வீட்டு வாசலில், டிராஃபிக் சிக்னல்களில் (இன்று டிராஃபிக் போலீசுக்கு கொண்டாட்டமான நாள்), ஃபோம் மெத்தைகளில், தாய் மடிகளில், கடற்கரை மணலில், காதலியின் கரங்களில், தந்தையின் கைப்பிடியில், 11 மணி உண்ணும் காலை உணவுகளில்,  தூரத்து மாமாவின் பார்வைகளில், நண்பர்களின் தோள்களில், காலண்டர் ராசிகளில் ...............

இப்படி ஒவ்வோர் ஞாயிறும் ஒரு சேதியை நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது. ஒரு வாரகால உழைப்பிற்கான இளைப்பாறுதலாகவும் அடுத்த வாரத்திற்கு தயாராவதற்கான முன்னேற்பாடகவும் நம் ஞாயிறுகள் இருக்கின்றன.

சிலரின் ஞாயிறுகள் கோல்ஃப் க்ளப்பிலும், பீச் ரிசார்ட்டிலும் விடிகின்றன. போதைதான் குறிக்கோள் என்றாலும், அது கிடைப்பது மானிட்டரிலா இல்லை ஸ்காட்ச்சிலா என்பதுதான் இச்சமூகத்தில் ஒரு மனிதனில் ஸோ கால்ட் ஸேடேடஸை தீர்மானிக்கிறது.

சில மனிதர்களுக்கு ஞாயிறுகள் எந்த வித்தியாசமும் இன்றி கடந்துபோகின்றன. ஞாயிறுகளிலும் சில கைகள் செருப்பு தைத்தபடியேதான் இருக்கின்றன. மலம் அள்ளியபடியே தான் இருக்கின்றன. பிச்சை எடுத்தபடியேதான் இருக்கின்றன.ஜெயில் கம்பிகளை எண்ணியபடியே இருக்கின்றன. கூட்டமும் வரவேற்பும் குறைந்தாலும் பறை அடித்தபடி, கூத்தாடியபடியே இருக்கின்றன.  சில கால்கள் பணம் தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றன. சில உடல்கள் தம்மை விற்றபடியே இருக்கின்றன. வாழ்க்கை விடுமுறை விடாது அவர்களை அடித்துக்கொண்டே இருக்கின்றது. அவர்களுக்கான ஞாயிறு எப்போது வரும் என்று தெரியவில்லை.

இந்த ஞாயிறு முட்டாள்கள் தினமாக விடிந்திருக்கின்றது. சில நேரங்களில், முட்டாளாக இருப்பது எவ்வளவு சுகம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இருந்தாலும் ஞாயிறு நமக்கு தரும் அனுபவம் பரவசம் நிறைந்தது. அற்புதமானது. ரசிக்கத்தக்கது. வார நாட்களில் நாம் விடுப்பு எடுத்தால் கூட அவை ஞாயிறுகளின் அருகில் கூட வரமுடியாது. இதுவரை எத்தனை ஞாயிறுகளை கடந்திருப்போம், என்னென்ன செய்திருப்போம் என்று யோசித்து பார்க்கிறேன். எண்ணங்கள் வந்து கொட்டியபடியே இருந்தாலும், சென்ற ஞாயிறில் என்ன செய்தேன் என்பதுகூட தெளிவாக நினைவில் இல்லை.

ம்ஹ்ம்...இனிப்புக் கடைக்குள் நுழைந்து இதில் எந்த ஸ்வீட் இனிக்கும் என்றால் என்ன சொல்வது ???


Friday, March 23, 2012

அந்த நொடியின் நுனியில்...

சென்ற ஆண்டு வெளியான எனது குறும்படம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள் நண்பர்களே...



போராடும் பொம்மைகள்

எழுதுவது என்பது நிஜமாகவே ஒரு கடினமான வேலை தான். படிப்பவர்களில் பெரும்பாலோர்க்கு எழுத வேண்டும் என்ற ஆவல் இயல்பாக எழக்கூடும். ஆனால் ஒருமுறை இருமுறை எழுத ஆரம்பித்த பிறகுதான் தெரியும், எழுதுவதென்பது எவ்வளவு கஷ்டமான வேலை என்று. ஏதோ ஓர் ஆர்வக் கோளாறில் எழுத ஆரம்பித்து பின்பு அதனை தொடர முடியாமல் கைவிட்டு, வெறும் வாசிப்பாளர்களாகவே மாறி விட்ட பலர் உண்டு. அது போல் ஒருவனாக நானும் மாறிவிடுவேனோ என்ற அச்சத்திலேயே தான் இத்தனை நாட்களாக இருந்தேன்.

வலைப்பூ ஆரம்பித்து உடனே முதல் பதிவேற்றிய பிறகு, அடுத்த என்ன எழுதுவது என்று தோன்றவில்லை. அவ்வளவு ஏன், முதலில் எழுத வேண்டும் என்றே தோன்றவில்லை. இதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதல் பதிவாக சினிமா விமர்சனம் எழுதிய பின், அடுத்த பதிவும் விமர்சனமாக இருக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தேன். அதனாலேயே, சமூக நிகழ்வுகளைப் பற்றி எழுத முற்படும் போது ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. கூடங்குளம், ஈழம், சங்கரன்கோவில், சேனல் 4 போன்ற ஏராளமான நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த போதும், நம் அரசியல் பார்வை சரியானதா, இந்தக் கருத்தை நாம் சரியாக புரிந்து வைத்திருக்கிறோமா, நம் பார்வை சரியானதா, தப்பாக எழுதிவிடப்போகிறோமா என்று குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கின்றதா, அல்லது அனைத்து ஆரம்ப எழுத்தாளர்களுக்கும் இது இருக்குமா என்று அனுபவஸ்தர்கள் சொன்னால் நல்லது. குறும்பட இயக்கம், நடுவே விபத்து, தயக்கம் என எழுதாததற்கு பல காரணங்கள் நானே சொல்லிக்கொண்டாலும் அவை சப்பைக்கட்டுக்களே என்பதை என் மனம் அறிந்தே இருந்தது. எழுத நினைத்திருந்தால் எழுதியிருக்கலாம்.

‘எல்லாம் நன்மைக்கே’ என்பார்களே. அதை தீர்க்கமாக நம்புபவன் நான். அதை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் இந்த நீள் விரதத்தை முடிப்பதற்கேற்ற ஒரு நிகழ்வு மார்ச் 21 அன்று நடந்தது. ‘உலக பொம்மலாட்ட நாள் ’.

தமிழகத்தின் அதிக லாபகரமான தொழிலான அரசியலை தவிர்த்து, மக்களிடையே வேரூன்றி போயிருக்கும் மற்றொன்று சினிமா. அதன் அதிவேக வளர்ச்சி பல நஷ்டங்களையும் தந்தே வந்திருக்கின்றது. நம் பாரம்பரிய கலைகள் மீதான விலகல் தான் அது. ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’ என்ற கூற்று இங்கே பொருந்தாது என்றே கருதுகிறேன். சினிமாவின் வளர்ச்சி, ஈர்க்கப்பட்ட மக்கள், விலக்கப்பட்ட கலைகள் என அது பெரும் விவாதம். அதற்கென தனியே ஒரு கட்டுரை எழுத வேண்டும். இப்போது உலக பொம்மலாட்ட நாள்.

சிறு வயதில் அவ்வப்போது சிறு சிறு நேரங்களில் பொம்மலாட்டம் பார்த்ததாக ஞாபகம். நினைவில் நிற்கும்படி கவனமூன்றி ஏதும் பார்த்ததில்லை. ஆனால் அந்த கலை குறித்து நிறைய படித்தே இருக்கிறேன். ஓர் ஆவணப்படம் எடுக்கும் போது அது குறித்து படிக்க நேர்ந்தது. உலக அளவிலும், தமிழகத்திலும் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாகவும் இப்போது மிகக்குறைவாகவும் நடத்தப்படும் ஒரு கலை இது. சமீப காலங்களில் பொம்மலாட்டத்தில் ஈடுபடும் நண்பர்களோடு தொடர்பில் இருந்தமையால் அது குறித்த வேறு சில விஷயங்களை அறிய முடிந்திருந்தாலும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தான் உலக பொம்மலாட்ட நாளை சிறப்பிக்கும் விதத்தில் கிண்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நடைபெற்ற சிறப்பு பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். பொம்மலாட்டம் உள்ளிட்ட பழங்கலைகள் என்றாலே மிக நீண்டது, தற்காலத்தை விட்டு விலகி நிற்கும், ரசனை அளவில் பழைய காலத்தையொட்டி இருக்கும்,  இந்த காலத்திற்கும் ஏற்றவை அல்ல என்ற ஓர் பொதுப்புத்தி நமக்கிருக்கும் அல்லவா ? இதில் ஓரளவு பொதுப்புத்தியுடன் தான் நான் சென்றேன். ஆனால் மேற்சொன்ன அத்தனை கருத்துக்களையும் அடித்து நொறுக்கியது அன்றைய பொம்மலாட்டம். அன்று நடைபெற்றது கையுறை பொம்மலாட்டம் வகை. பொம்மைகளுக்கும் கையை விட்டுக் கொண்டு நிகழ்த்தப்படும் கலை இது. பல நூறு வருடங்கள் தொன்மையான கலை இது. அன்று பொம்மலாட்ட நாள் என்பதால் முழு நிகழ்வாக இல்லாமல்,  புராணம், சமூகம், உள்ளிட்ட அனைத்து கருக்களின் அடிப்படையில் ஒவ்வொரு காட்சியாக செய்தனர். மேலும் அன்று உலக வன நாள். அடுத்த நாள் உலக நீர் நாள். இதுவும் பொம்மலாட்டத்தின் கருப்பொருளாய் அமைந்தது.

ஒரு கலையின் இரண்டு முக்கிய கூறுகள், அழகியல் மற்றும் கரு என்பது என் கருத்து. ஒன்று ஒரு கலை அதன் முழு அழகியலோடு இருத்தல் வேண்டும் அல்லது நல்ல கருப்பொருளோடு இருத்தல் வேண்டும். இவை இரண்டுமே சேர்ந்திருந்தால் அது தான் அந்த படைப்பின் உச்சம். இது இரண்டுமே சேர்ந்து அமைக்கப்பட்ட அனைத்து கலை வடிவங்கள் அழியா படைப்புகளாகவே சரித்திரத்தில் நிலைத்திருக்கின்றன. இது சினிமாவுக்கும் பொருந்தும். அன்று நான் பார்த்த பொம்மலாட்டம் இந்த இரண்டுமே நிரம்பிய ஒரு கலையாக இருந்தது.

முதலில் ஒரு புராண கால காதல் காட்சியோடு ஆரம்பித்த ஆட்டம், பின்பு தமிழ்ப் பெருமை, வனப் பாதுகாப்பு, நீர் சுகாதாரம், மருத்துவம், மூட நம்பிக்கை, சாதி என ஒவ்வொரு தளத்திலும் நின்று விளையாடி விட்டு வந்தது. முதலில் ஆரம்பித்த காதல் பாடலிலேயே அந்த கலையின் அழகியல் வெளிப்பட்டது. இரண்டு பொம்மைகளும் கைகோர்த்துக் கொண்டு ஆடுவது, ஒன்றாய் சுற்றுவது, காலில் விழுவது, போன்ற பல கடினமான அசைவுகளையும் எளிதில் காணமுடிந்தது. அதில் வரும் பாடல்களும் குழுவினரின் சொந்த கற்பனையில் உருவான பாடல் என்பது கூடுதல் சிறப்பு.

அடுத்து தமிழ்ப்பெருமையை பறைசாற்றும் காட்சி, ஒரு குரங்கின் வாயிலாக வனத்தில் பாதுகாப்பு குறித்து சொல்லும் காட்சி, ஒரு கணவன் மனைவியின் வாயிலாக நீர் சுகாதாரம் குறித்து சொல்லும் காட்சி, ஒரு போலிச்சாமியாரைக் கொண்டு மூட நம்பிக்கையை சாடி, மருத்துவம் கூறும் காட்சி, சிறுவர்களின் இயற்கைக் கனவு காட்சி, பேரிடர்களின் மூலம் மக்கள் ஒற்றுமையைக் கூறும் காட்சி என அனைத்தும் ஒவ்வோர் வகையில் சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இந்த பொம்மைகள் சமூகத்திற்கு சேதி சொல்லிக் கொண்டே சென்றன. பேரிடர் பேய் என்ற ஒன்றை கொண்டுவரும் போது, என்னடா பேய் என்ற மூடநம்பிக்கையை உள்ளே கொண்டுவருகிறார்கள் என்று பயந்தால், இறுதியில் அது கனவுதான், பேயெல்லாம் இல்லை என்று மற்றோர் பொம்மையின் மூலமே விளக்கியது சிறப்பு. மேடை, பொம்மைகள், உடைகள், இசை, ஆட்டுவிப்பு, குரல் என் ஒவ்வொன்றுமே அதனதன் தனித்துவத்தோடு விளங்கியது.

மொத்த நிகழ்ச்சி முடிந்ததும், ஒரு நல்ல சுவாரசியமான, எல்லாருக்கும் ஏற்ற  அற்புதமான ஒரு கலையை இத்தனை காலம் பார்க்காமல் இழந்திருக்கிறோமே என்ற எண்ணம் எழுந்தது. இதுவே குழுவினரின் வெற்றி எனக் கருதுகிறேன்.

ஒவ்வோர் திரைப்படைப்பிற்குப் பிறகும் திரைக்கு பின்னால் உழைப்பவர்களின் சொல்லப்படாத கதை இருக்கும். இந்தக் கலையும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த பொம்மலாட்டத்தை நிகழ்த்தியது கலை பொம்மலாட்டக் குழு. இதனை தலைமையேற்று நடத்துபவர் திரு. கலைவாணன் அவர்கள். இவரின் தந்தை கலைமாமணி கவிஞர் முத்துக்கூத்தன். பல கவிதைகள், நாடகங்கள், பாடல்கள் படைத்த திரு. முத்துக்கூத்தன் அவர்கள் 35 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த இந்தக் கலையை கலைவாணன் இன்று வரை தொடர்ந்து வருகிறார்.

ஒரு கலை அதன் உச்சத்தில் இருக்கும் போது பலர் அந்த கலையை செய்யக்கூடும். அதில் லாபநோக்கும் இருக்கக்கூடும்.  ஆனால் அதே கலை அதன் குறைவான நிலையில் இருக்கும் போது தான் உண்மையாக அந்த கலையின்பால் காதல் கொண்டவர்கள் யாரென்று தெரியும். அப்படிப்பட்டவராக எனக்கு தெரிந்தனர் கலை பொம்மலாட்டக் குழுவினர். பொம்மலாட்டம் என்றும் கலை வணிகரீதியாக அதன் வீழ்ச்சியில் இருக்கும் போது, காசை விட கலைதான் முக்கியம் என்று விடாப்பிடியாய் இன்றும் தனது பெயருக்கேற்றவாரு அந்த கலையை பாதுகாத்து நிகழ்த்தி வருகிறார் கலைவாணன். அவர் மட்டுமல்ல, மொத்த குடும்பமும் இந்த கலையில் ஈடுபட்டு வருகிறது என்பது அனைவரையும் புருவமுயர்த்த வைக்கும் ஒரு செய்தி. ஆம் இதற்கு பொம்மைகள் செய்வது, உடைகள் செய்வது, கலை அமைப்பது, இசைக்கோர்வை, ஆட்டுவிப்பது என எல்லாவற்றையும் மனைவி, மகன்கள், தங்கை, மைத்துனர் என அவரின் மொத்த குடும்பமும் ஈடுபட்டு செய்கிறது. சொந்த லாபத்துக்காக குடும்பம் குடும்பமாக வாரிசு வாரிசாக அரசியலில் குதித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஒரு கலைக்காக மொத்த குடும்பமும் லாபநஷ்டம் பார்க்காமல் உழைப்பது பெருமைப்படக் கூடிய விஷயம்தான்.

வழக்கம் போல் அரசிடம் இருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. அது தேவையும் இல்லை என்கிறார் கலைவாணன். ‘எனக்கு இந்த கலை வாழ்ந்தால் போதும். அரசின் அங்கீகாரமோ, பணமோ தேவையில்லை ’ என்கிறார். இது போன்ற உண்மைக் கலைகளையும் கலைஞர்களையும் ஊக்குவிப்பதில் தான் ஒரு அரசின் பண்பாட்டு பாதுகாப்பு அடங்கியிருக்கிறது. பொதுவாக அனைத்து மரபுக் கலைகள் மேலும் இருக்கும் குற்றச்சாட்டு, அந்த கலைகள் தங்கள் கருப்பொருளை மாற்றிக்கொள்வதில்லை. புராணக் கதைகளையே இன்றும் நடத்துகின்றன என்பதுதான். அந்தக் குறை இந்த பொம்மலாட்டத்தில் இல்லை. அனைத்து வகையான சமகால கருத்துக்களும் இங்கு நிகழ்த்தப்படுகின்றன.

சுனாமி வந்த சமயம். தொடர்ச்சியாக அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொம்மலாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதைப் பார்த்து ஒரு சிறுமி ‘சுனாமி வந்தப்புறம் இங்க நிறைய பேர் வந்தாங்க. சாப்பாடு கொடுத்தாங்க, பிஸ்கட் கொடுத்தாங்க, டிரஸ் கொடுத்தாங்க, இன்றும் என்னென்னவோ கொடுத்தாங்க...ஆனா உங்க பொம்மலாட்டம் தான் வாழ்றதுக்கான நம்பிக்கைய கொடுத்துச்சு...’ என்றிருக்கிறாள். இதுதான் அந்த கலையின் வெற்றி. இதைத் தாண்டி ஒரு கலைஞனுக்கு பரிசேதும் இருக்க முடியாது.

ஒரு பொம்மலாட்ட கலைஞரா இந்த சமூகத்துக்க என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, ‘தயவுசெய்து பாரம்பரிய கலைகளை அழித்து விடாதீர்கள். அதில் தான் நம் மொத்த கலாச்சாரமும் அடங்கியிருக்கிறது. மேலும் நம் பள்ளிகளில் பாடம் நடத்தும் முறையாகவே பொம்மலாட்டம் கொண்டு வரப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு பொம்மலாட்டம் தெரிந்திருந்தால், அதன் மூலம் பாடம் நடத்தப்பட்டால் தானாய் மாணவர்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அது பரவும்’ என்கிறார்.

பள்ளிகளை தாண்டி நாமும் இந்த கலைகளை வளர்க்க ஆர்வம் காட்டவேண்டும். பல பொது நிகழ்வுகளில், பொம்மலாட்டத்தை சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தலாம். விளையாட்டு விழாக்கள், சமூக விழாக்கள், கல்லூரி விழாக்கள் உள்ளிட்ட விழாக்களிலும் முக்கியமாக அரசு நிகழ்ச்சிகளிலும் பொம்மலாட்டத்தை சிறப்பு நிகழ்ச்சியாக வைத்து ஆரம்பித்தால் கலையும் காப்பாற்றப் படும். கலைஞர்களும் காப்பாற்றப்படுவர். இதற்கு ஆகும் செலவு, ஒரு சினிமா பிரபலத்தை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து, அவருக்கு உணவு, கார், பணம் என்று செய்யும் செலவுகளை விட பல பல பல மடங்கு குறைவுதான்.


‘ஒன்றரை மணி நேரம் பொம்மைகளை ஆட்டுவிக்கும் போது கைகள் வலிக்கத்தான் செய்யும். ஆனால் என் கை வலியை விட இச்சமூகத்தின் வலி அதிகமாய் இருக்கின்றது. பணம் வருகிறதோ இல்லையோ, என் பொம்மைகள் தொடர்ந்து இந்த சமூகத்திற்கு கருத்து சொல்லிக்கொண்டே இருக்கும். சமூகக் கொடுமைகளை எதிர்த்து போராடிக்கொண்டே இருக்கும்’ என்று கூறி முடித்தார் கலைவாணன். பொம்மைப் போராளிகளுக்கு மத்தியில், பொம்மைகளை வைத்து போராடும் ஒரு உண்மை போராளியாகவே அவர் தெரிந்தார்.

இந்த பதிவில் அன்று நடந்த பொம்மலாட்டத்தை பற்றியும் அதன் சிறப்பம்சங்களைப் பற்றியும் அதிகமாக இல்லையே என்று உங்களுக்கு தோன்றலாம். ஆம் உண்மைதான். அது பற்றி அதிகமாக எழுதப்படவில்லை. ஏனென்றால், பொம்மலாட்டம் படிக்கப்பட வேண்டிய கலை அல்ல. பார்க்கப் பட வேண்டிய கலை....தவறாமல் பாருங்கள்.

தொடர்புக்கு : திரு.கலைவாணன் - 9444147373

பி.கு : இன்று முதல் வாரம் குறைந்தது ஒரு பதிவாவது எழுதவேண்டும் என திட்டமிருக்கிறேன். பார்க்கலாம்...