Tuesday, November 6, 2012

ராயல் சல்யூட் !!!


மதுரையில் ஏற்பட்ட ஓர் அனுபவம். கொளுத்தும் வெயில். நானும் இரு நண்பர்களும், மதிய உணவு முடித்துவிட்டு, ஒரு கடையில் டீ, குளிர்பானம் (பொவண்டோ !) குடித்துக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு வயதான பெரியவர், எண்பது வயதைத் தாண்டியிருப்பார், தள்ளாடியபடி அருகில் வந்தார். கைகளில் பர்ஸ்களும், செயற்கை மாலைகளும் வைத்திருந்தார். அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் சென்று வேண்டுமா என்று கேட்டு விற்றுக்கொண்டிருந்தார். இறுதியில் எங்கள் அருகேயும் வந்து ‘வேணுமா’ என்று கேட்டார். அந்த பொருட்கள் எங்களுக்கு தேவையில்லாததால், வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டோம். உச்சி வெயிலில் அவர் தள்ளாடியபடி சென்றதைப் பார்த்து, பரிதாபப்பட்ட நண்பர், அவரை அழைத்து, ‘ஏதாவது சாப்படறீங்களா, டீ சொல்லட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில், ‘அதெல்லாம் வேண்டாம். இதுல ஏதாவது வாங்கிக்கோங்க. நானே வாங்கி சாப்பிட்டுக்கறேன்’ . 




ஒரு கணம், ஆடிப்போன நண்பர், செயற்கை மாலைகளை வாங்கி அதற்கான பணத்தைக் கொடுத்தார். அவரும், பணத்தை வாங்கிவிட்டு, தள்ளாடியபடி அடுத்தவரிடம் அந்த பணத்தை விற்பதற்கு தள்ளாடியபடி சென்றார்.

ஒரு நொடியில், பளாரென்று அடித்த பதில் அவருடையது. எங்களின் பரிதாபத்தை ஒரே வார்த்தையில் துடைத்துச் சென்றார். ‘நீங்க என்னடா என்ன பார்த்து பரிதாபப்படுறது. எனக்கு ஓசில லாம் ஒன்னும் வேணாம். ஏதாவது பொருள் வாங்கிக்க. நானே உழைச்சு சம்பாதிச்சு சாப்டுக்கறேன்’ என்றது அவரது பதில். என்ன ஒரு சுயமரியாதை, உழைக்கும் வெறி. அவரது வயதில் இந்த அளவிற்கு ஒரு தன்னம்பிக்கையும் உழைப்பும் எனக்கு வருமா என்று தெரியவில்லை. வரவேண்டும் என்று என்னையே நான் பிரார்த்தித்துக்கொள்கிறேன். நாம் இந்நேரம் எங்காவது அமர்ந்து கொண்டு இந்த பதிவை டைப் செய்து கொண்டு, படித்துக்கொண்டு இருக்கும் இந்நேரத்திலும், நிச்சயம் அந்த உழைப்பாளி மதுரைத் தெருக்களில் ஏதேனும் பொருள்களை விற்று உழைத்துக்கொண்டுதான் இருப்பார். இவரைப் பார்த்தாவது, உக்காந்தே ஓ.பி அடிக்கற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திருந்தணும். இந்த உழைப்பாளிக்கு லைக் போடும் உங்கள் அனைவர் சார்பிலும் ஒரு ராயல் சல்யூட் அடித்துக் கொள்கிறேன் !!!

No comments:

Post a Comment