Wednesday, November 5, 2014

மெட்ராஸ் & ஜீவா

ஒடுக்கியோர் குலப்பெருமையை மட்டுமே ஃபேண்டசைஸ் செய்து திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், ஒடுக்கப்பட்டோர் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி அதில் சூழ்ந்துள்ள அரசியலை பேசி, சமூக அரசியலை வலியுறுத்திறது ‘மெட்ராஸ்’.
நிகழ்காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தை சேர்ந்த ஒரு அமைப்பை, அதில் வேர் பரப்பியிருக்கும் சாதிவெறியை, அப்பட்டமாக தோலுரித்து கேள்வியெழுப்பும் தைரியமான படம் ‘ஜீவா’. அரசாங்க அமைப்பு ஒன்றை நோக்கி இத்தனை நேரடியாக வேறெந்த படமும் கேள்வியெழுப்பியதில்லை.
இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளிவந்தது எத்தனை அழகான யதார்த்தம். இரண்டு படங்களுமே வணிக ரீதியாக வெற்றி பெற்றிருப்பது ஆரோக்கியமான ஒன்று. கேட்க வேண்டிய இடத்தில் இந்த படங்கள் எழுப்பும் கேள்விகள் ஒலிக்குமாயின் நிச்சயம் அது ஒரு பெரும் மாற்றத்திற்கான முதல் படியாக இருக்கும். இரு படங்களிலும் உங்களுக்கு பல்வேறு விமர்சனங்களும் கேள்விகளும் குறைகளும் இருக்கலாம். அத்தனையையும் படங்களை பார்த்துவிட்டு கேள்வியாக எழுப்புங்கள். விவாதத்தை தூண்டுங்கள். ஒரு பெரும் உரையாடல் நடக்கட்டும். என்னளவில், மெட்ராஸ் ஜீவா இரண்டு படங்களை பற்றி, அவை பேசும் அரசியலைப் பற்றி எழுப்பப்படும் எந்த ஒரு கேள்வியும், தொடரப்படும் எந்தவொரு விவாதமும், பேசப்படும் எந்தவொரு உரையாடலும், நிச்சயம் நாளைகளின் சினிமா சமூக அரசியலை வீரியமாக தைரியமாக பேசிடவே வழிவகுக்கும்.
அமைதியாக தேங்கியிருக்கும் ஓடையில் பேரமைதியுடனும் பெருவெறியுடனும் காத்திருக்கிறது முதலை. ஓடையில் ஏற்படும் சிறு சலனமும் முதலையை அப்புறப்படுத்தாவிட்டாலும், அசைத்துப் பார்க்கும். அந்த ஓடையில் எரியப்பட்ட இரு சிறு கற்கள் மெட்ராஸ் & ஜீவா.

No comments:

Post a Comment