Wednesday, November 5, 2014

தலைமுறைகள்

சற்றுமுன் சன் டிவியில் சினிமா செய்திகள் நிகழ்ச்சியில், தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்பட கலைஞர்கள் பேசும் ஒரு நியூஸ் பைட் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இயக்குனர் ராம், பாடலாசிரியர் முத்துக்குமார், சாதனா உட்பட தேசிய விருது பெற்ற அனைத்து கலைஞர்களும் அதுகுறித்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர். தேசிய ஒருமைப்பாட்டுக்கான படமாக தேசிய விருது பெற்ற ‘தலைமுறைகள்’ திரைப்படத்திற்கான விருதை, இயக்குனர் பாலுமகேந்திரா இல்லாத காரணத்தினால், அவரது பேரன் அவருக்கு பதில் பெற்றிருக்கிறார். அதுகுறித்து அச்சிறுவன் பேசுகையில், ‘Its really exciting...Im very happy...I love my Grandfather...I miss him so much...etc...’ என்று அவன் பேசியதில் ஒரே ஒரு வார்த்தை கூட தமிழில் இல்லாமல், முழுக்க முழுக்க ஆங்கிலமயம்தான். இதே போன்று ஆங்கிலத்தில் திளைக்கும் ஒரு பேரனுக்கு தமிழ் கற்றுக்கொடுத்து, அவனுக்கு தமிழில் அவசியத்தையும் அருமையையும் உணர்த்தும் தாத்தாவின் கதைகளை பேசிய படம்தான் ‘தலைமுறைகள்’. தாத்தாவாக பாலுமகேந்திராவே விரும்பி நடித்த படமும் அது. அதே தாத்தாவின் பேரன், அதே படத்திற்கான தேசிய விருது குறித்து பேசுகையில், முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசியதை பார்ப்பது, எத்தனை வருத்தம் கலந்த நகைமுரண் ??? இந்த சிறுவன்தான் படத்தில் வந்த பேரனோ என்றும், அவனுக்கு தமிழின் அவசியத்தை உணர்த்த முயன்று, முடியாமல் போன இயக்குனர் தாத்தாவின், மனதில் ஆறாமல் இருந்த ஆசைகளின் விதையே, தலைமுறைகள் படமாகியிருக்குமோ என்று கூட உறுதியாக எண்ணத் தோன்றியது.
எப்படியோ, இன்று அச்சிறுவன், தமிழின் தேவையை பற்றிப் பேசிய தலைமுறைகளுக்கான தேசிய விருதோடு, அது குறித்து ஆங்கிலத்திலேயே பேசும்போது, தலைமுறைகள் படத்தின் இறுதிக்கட்டத்தில், இறப்பின் விளிம்பில், பாலுமகேந்திரா, ‘தமிழை மறந்துடாதீங்கப்பா...’ என்று கலக்கமான குரலுடன் கூறும் வார்த்தைகள் தான் காதில் ஒலித்தன.

No comments:

Post a Comment