Wednesday, November 5, 2014

ஒரு வருட வசந்தம் !!!

சென்ற ஆண்டின் இந்த நிமிடங்கள் தந்த பரவசமும் படபடப்புமே இன்னும் அடங்கவில்லை. இதே நாளில்தான் எங்கள் திருமணம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நண்பர்கள் சூழ மிக எளிமையாக பிரம்மாண்ட மகிழ்ச்சியோடு சாதி மறுத்து, சடங்கற்று வாழ்வில் இணைந்தோம். ஒரு வருடம் ஓடிவிட்டது. மறக்க முடியா நினைவுகளை சுமந்து சென்ற ஒரு வருடம். எண்ணற்ற சம்பவங்கள் நிறைந்த ஒரு வருடம். இன்னும் அவள் காதலுக்கு தகுதியானவனாக மாற முயன்றுகொண்டே இருக்கிறேன். வாழ்க்கை அற்புதமாக இருக்கிறது. ஒரே குறையைத் தவிர வேறொன்றுமில்லை. அம்மா இருந்திருக்க வேண்டும். எல்லோரையும் விட இந்த நாளை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அம்மா தான். சென்ற ஆண்டே இந்த நாளில் கண்ணீரை துடைத்து துடைத்து சிரித்துக் கொண்டிருந்தது அம்மா தான். இந்த நாளில் அவள் இருந்திருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும். இன்னும் மனம் அந்த வெறுமையில் இருந்து மீளவில்லை. எப்போதும் எனை மீட்டு மடிதந்து, அரவணைத்து, கண்ணீர் துடைத்து, சிரிக்க வைத்து தூங்க வைப்பது என் அன்புதான். அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், சிரிப்பதற்கான ஒரு காரணத்தை தேடித் தேடி சிரிப்பதுதானே வாழ்க்கை. எப்போதும் போல் அப்பா, அண்ணன் உண்டு. என்றென்றும் நண்பர்கள் தோள் உண்டு. அம்மாவிற்கு பிறகு என்னை மொத்தமாய் தத்தெடுத்துக் கொண்ட நீங்கள் உண்டு.

வேறென்ன சொல்ல. காதலைப் பற்றியும் அவளைப் பற்றியும் இந்த ஒரு வருடத்தைப் பற்றியும். மனம் நிறைந்து இருக்கிறது. அந்த முதல் நாளின் காதலும் க்ரேஸுமே இன்னும் எனக்குத் தீரவில்லை. மொத்த காதலையும் அள்ளி அள்ளி நனைக்க விரும்புகிறேன். இன்னும் வேண்டும் எனக்கு நாட்களும் நிமிடங்களும். அவள் குடும்பமும் எங்களை அரவணைக்கப் போகும் நாளுக்காக ஏக்கத்தோடு காத்திருக்கிறோம். காதல், காமம், கோபம், சாந்தம், சிரிப்பு, கண்ணீர், நிறை, குறை, இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, கனவு, ஆசை, ஏக்கம் எதுவந்த போதும் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா...!!!
தோற்றங்கள் மாறிப்போகும் தோல்நிறம் மாறிப்போகும்
மாற்றங்கள் வந்துமீண்டும் மறுபடி மாறிப்போகும்
ஆற்றிலே வெள்ளம்வந்தால் அடையாளம் மாறிப்போகும்
போற்றிய காதல் மட்டும் புயலினும் மாறாதம்மா !!!

No comments:

Post a Comment